
தமிழக ஆந்திர எல்லையில் உள்ள மோர்தானா அணை 60 நாட்களுக்குள் மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டியதுடன் உபரி நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 11.50 மீட்டர் உயரமுடையது. இதன் முழுக் கொள்ளளவு 261.360 மில்லியன் கன அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி ஆந்திர வனப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால், அக்டோபர் மாதம் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. மேலும், நவம்பர் மாதம் ‘நிவர்’ புயல் பாதிப்பால் கிடைத்த அதிகபட்ச அளவாகக் கிடைத்த சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதும் கவுன்டன்யா ஆற்றின் வழியாகச் சென்று பாலாற்றில் கலந்தது. மேலும், கால்வாய் வழியாகவும் ஏரிகளுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 11.40 அளவாகக் குறைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

